aa

aa





''இரண்டு வருடங்களுக்கு முன் எனக்குத் திருமணமானது. முடி கொட்டுவது என்பது, இதுவரை எனக்குப் பெரிய பிரச்னையாக இருந்ததில்லை. சமீபகாலமாக தலையின் ஒரு பகுதியில் மட்டும் (நடுமண்டையில்), முடி கொத்தாகக் கொட்டி, உள்ளங்கை 
அளவுக்கு வழுக்கை விழுந்துவிட்டது. இதற்கு தீர்வு என்ன?'' என்று, தஞ்சாவூரைச் சேர்ந்த வாசகி, நம் ஃபேஸ்புக் பக்கத்தில் (eravur news) கேட்டிருந்தார்.

ராஜபாளையத்தைச் சேர்ந்த தோல் சிறப்பு மருத்துவர் பொன்னுசாமி பதில் தருகிறார்.

''இதை, அலொபீஸியா அரேட்டா' (Alopecia Areata-AA ) பிரச்னை என்போம். கை, கால், புருவங்கள் என உடலின் ரோமங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும், பொதுவாக வட்டம் அல்லது நீள்வட்ட வடிவில் கொட்டும். மனஅழுத்தம், உடல் பிரச்னை, பூஞ்சைத் தொற்று போன்றவற்றால் இந்தப் பிரச்னை ஏற்படலாம்.

ஆட்டோஇம்யூன் டிசீஸ் (autoimmune disease) பிரச்னையால் விளைகிற கோளாறு இது. அதாவது, நம் உடலின் செல்கள், தங்களின் திசுக்களையே அடையாளம் காண முடியாமல், அவற்றை அந்நியமாக நினைத்து எதிர்வினை புரிவதால் ஏற்படும் சிக்கல். அப்படி தலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஹேர்ஃபாலிக்கிள் சிதைக்கப்படும்போது, அங்கு இந்த வழுக்கை ஏற்படுகிறது.

கிராமப்புறங்களில் இதை 'பூச்சிவெட்டு’ என்று சொல்லி, பாதிக்கப்பட்ட இடத்தில் வெங்காயம், தும்மட்டிக்காய் (குமுட்டிக்காய்) போன்றவற்றை வெட்டியோ, அரைத்தோ தடவுவார்கள். இது பிரச்னையை அதிகரிக்கவே செய்யும். நம் முன்னோர்களின் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் இருந்து முற்றிலும் மாறி நிற்கும் நாம், அவர்களின் வைத்தியத்தை மட்டும் பின்பற்றினால், அதை நம் இப்போதைய உடல்கூறு ஏற்றுக்கொள்வதில்லை.

இது சாதாரண முடி கொட்டும் பிரச்னை அல்ல என்பதால், தாமதிக்காமல் நீங்கள் உடனடியாக சரும சிறப்பு மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டியது முக்கியம். பிரச்னையின் இயல்பு, அதன் வீரியம், உங்கள் உடல்நிலை போன்ற கூறுகளின் அடிப்படையில், கிரீம், ஆயின்மென்ட், மாத்திரைகள் என்று சிகிச்சை வழங்கப்படும். ஒருவேளை அதற்கும் மேற்பட்ட சிகிச்சை தேவைப்பட்டால், பாதிப்புள்ள இடத்தில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்படும். 99 சதவிகிதம் பேருக்கு மீண்டும் முடி வளர ஆரம்பிக்கும்... கவலை வேண்டாம்!''

Advertisement

0 comments:

Post a Comment

 
Top